பைஸர் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தொடர்பில் வெளியான எச்சரிக்கை
பைஸர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் போட்டுக்கொண்ட பெரும்பாலானோருக்கு, இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டபோது ஏற்பட்ட அதே பக்கவிளைகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி குறிப்பிட்டவர்களுக்கு குறைவான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளமை இஸ்ரேலிய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
வீரியம் மிகுந்த டெல்டா மாறுபாடு பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் பூஸ்டர் டோஸ்களை வழங்கத் தொடங்கியது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாடு அமைப்பானது அனுமதி அளிக்காத நிலையில், இஸ்ரேல் அரசு பரிச்சார்த்த முயற்சியாக மூன்றாவது டோஸ் மருந்தை மக்களுக்கு அளித்தது.
மொத்தம் 240,000 பேர்களுக்கு பைஸர் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தடுப்பூசியை அளித்துள்ளது. இதில், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1ம் திகதி வரை தடுப்பூசி போட்டுக்கொண்ட 4,500 பேர்களிடம் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 88% பேர்களுக்கு இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட வேளையில் இருந்த அதே உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். 31% பேர்களுக்கு லேசான பக்கவிளைவுகள் தென்பட்டுள்ளது.
ஆனால், 0.4% பேர்களுக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், 1% பேர்களுக்கு மருத்துவ உதவியை நாடும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் இஸ்ரேலிய நிபுணர்கள் தரப்பு உறுதியளித்துள்ளது.