கனடா உண்டுறை பள்ளியின் அருகே குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள குழப்பம்
கனடாவில் தொடர்ந்து பூர்வக்குடியின குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் சம்பவங்கள் நாட்டையே அதிரவைத்துள்ளதை அறியாதவர்கள் இருக்கமுடியாது.
பல ஆண்டுகளுக்கு முன், பூர்வக்குடியின குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடமிருந்து கட்டாயப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டு, உண்டுறை பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் தங்கள் தாய் மொழி மற்றும் கலாசாரத்தைக் கைவிட வற்புறுத்தப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர்களால் அடித்து நொறுக்கப்பட்டும், துஷ்பிரயோகம் செய்யப்பட்டும் இருக்கிறார்கள்.
அப்படி பாதிக்கப்பட்ட பலர், சொல்லப்போனால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் இறந்த விடயம் அவர்களது பெற்றோருக்குக் கூட தெரிவிக்கப்படாமல் அந்தந்த பள்ளிகளின் அருகிலேயே புதைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு கல்லறைகள் எதுவும் கட்டப்படவில்லை.
ஆக, இறந்தது யார், அவர் எங்கு புதைக்கப்பட்டுள்ளார் என்ற எந்த விவரமும் தெரியாமல், வெறுமனே இந்த இடத்தில் ஒரு உடல் புதைகப்பட்டுள்ளது என்ற விவரம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்படி ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத குழந்தைகளின் கல்லறைகள் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனவே, எங்கெல்லாம் உண்டுறை பள்ளிகள் உள்ளனவோ, அங்கெல்லாம் இறந்த குழந்தைகளின் உடல்கள் உள்ளனவா என்பதை ராடார் உதவியுடன் தேடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
அவ்வகையில், Nova Scotiaவிலுள்ள Shubenacadie என்னும் இடத்தில் அமைந்துள்ள உண்டுறை பள்ளி ஒன்றின் அருகில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில், அந்த பள்ளியின் அருகில் குறிப்பிட்ட தொலைவு வரைக்கும் எந்த கல்லறையும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஒருபக்கம், குழந்தைகளின் கல்லறைகள் இல்லை என்ற விடயம் ஆறுதலை அளித்தாலும், மறுபக்கம் அந்த பள்ளிகளில் படித்தவர்கள் மாயமாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த குழந்தைகள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதைத் தொடர்ந்து குழப்பமும் ஏற்பட்டுள்ளது.