அமெரிக்காவில் இரண்டாவது விமான விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பனைவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாகி குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிலடெல்பியா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 30 நொடிகளில் இந்த விபத்து எற்பட்டுள்ளது.
விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமான வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏர் எம்புலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் எம்புலன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை மருத்துவ நோயாளி மற்றும் நோயாளியின் உறவினர் உடன் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
அதேவேளை கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வொஷிங்டன் பகுதியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீது பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ ஹெலிகொப்டர் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு விமானம் விபத்துக்குள்ளாகியுளமை குறிப்பிடத்தக்கது.