‘ஆறாம் நிலம்’; ஈழத் தமிழர்களின் ஆறாத ரணங்களை எடுத்துச் சொல்லும் திரைப்படம்
ஐபிசி தமிழின் தயாரிப்பில், ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படம் ஆறாம் நிலம்.
ஒன்றரை மணிநேர படத்தில் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் முகமாக ஆறாம் நிலம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை சொல்லப் படாத ஒரு கதைக் களம் இதில் பேசப்பட்டுள்ளது.
போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் போருக்குப் பிந்திய பத்தாண்டுகளின் பின்னாலும்கூட முற்றிலும் அகற்றப்படாத சூழல் நிலவுகின்றது.
கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனோரைத் தேடும் போராட்டம், முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது.
இவற்றை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திய விதமும் நகர்த்திய விதமும் பிரதிபலிப்பும் கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த கண்ணி வெடிகளை அகற்ற 100 நாள் வேலைத் திட்டம் போல ஒரு சமூக சேவை நிறுவனம் ஆண்களையும் பெண்களையும் அந்த நிலத்தில் இறங்கி விடுகிறார்கள்.
உயிரைகையில் பிடித்துக் கொண்டு கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஒரு பெண் குண்டு வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் தொடர்ந்து கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நவயுகா குகராஜா அவரது மகளாக ஜீவேஸ்வரன் அன்பரசி மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கணவனைத் தேடும் பெண்ணாக, பிள்ளைக்குத் தாயாக, போருக்குப் பின்னான வாழ்வின் அத்தனை நெருக்கடிகளுக்கும், சமூக அழுத்தங்களுக்கும், மனப்போராட்டங்களுக்கும் முகம் கொடுக்கும் பெண்ணாக மிகத் தேர்ந்த நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கின்றார் நவயுகா.
நடிகர் நடிகைகள் அனைவரும் ஈழத்தமிழர்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
முன்னாள் போராளியாக, கண்ணிவெடி அகற்றும் குழுவின் பொறுப்பாளனாக பாஸ்கியினுடைய நடிப்பு இயல்புத் தன்மையுடன் வெளிப்பட்டிருக்கின்றது. ஏனைய பாத்திரங்களும் தமது பங்கினைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.