தொற்றாளர்களை 94 சதவீதம் துல்லியமாக கண்டறியும் மோப்ப நாய்கள்!
உலக நாடுகளையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பாதிப்பின் மத்தியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை விரைவில் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் எல்.எஸ்.டி.எம். பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை, நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆராய்ச்சியில், நன்கு பயிற்சி தரப்பட்ட நாய்கள், மோப்ப சக்தி வாயிலாக, ஒருவர் கொரோனா நோயாளியா என்பதை, 94 சதவீத துல்லியத்துடன் கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக மருத்துவ கண்டுபிடிப்பு நாய்கள் பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், நாய்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கினர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உடை, முக கவசம், போன்றவற்றை நாய்களிடம் கொடுத்து, மோப்ப சக்தியை உணரச் செய்தனர். இதையடுத்து, 3,758 பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன. அவற்றில், கொரோனா நோயாளிகள் 325 பேர், நோயால் பாதிக்கப்படாத 675 பேரின் சளி மாதிரிகளை, நாய்கள் துல்லியமாக அடையாளம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் , விமான நிலையத்தில் இரண்டு மோப்ப நாய்கள் மூலம், அரைமணி நேரத்தில், 300 பயணியரிடம் கொரோனா பாதிப்பு உண்டா, இல்லையா என்பதை கண்டறிந்து விடலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.