4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ்!
நாசாவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 3வது முறையாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பவுள்ளது.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 மாதத்துக்கு ஒரு முறை என்கிற வகையில் சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்.
விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் அரசு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் க்ரூ டிராகன் விண்கலத்துடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 2 வீரர்களும், நவம்பர் மாதம் 4 வீரர்களும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் சென்றனர்.
நாசாவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 3வது முறையாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பவுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தாமஸ் பெஸ்கெட் , மேகன் மெக் ஆர்தர் , நாசா காமண்டர் ஷேன் கிம்பரோ மற்றும் ஜப்பானை சேர்ந்த விண்வெளி வீரரான அகிஹிகோ ஹோஷைட் ஆகிய 4 பேரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்படும் பால்கன் 9 ராக்கெட்டில் பறக்கவுள்ளனர். இவர்கள் 6 மாத காலம் அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்வர்.