இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச 10 உலங்கு வானூர்திகள்
இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக உலங்கு வானூர்திகளை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இந்த உலங்கு வானூர்திகளுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது.
'மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் திட்டத்தின்' (Excess Defense Articles Program - EDA) கீழ் இவை இலங்கைக்கு மாற்றப்படுகின்றன.
டெக்சாஸில் தயாரிக்கப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த இந்த உலங்கு வானூர்திகள் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிட்வா சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் உலங்கு வானூர்திகள் வகிக்கும் முக்கிய பங்கை தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 10 உலங்கு வானூர்திகளும் விமானப்படையின் திறனை அதிகரிப்பதோடு, விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும்.
இதன் மூலம் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க இலங்கை விமானப்படைக்கு வாய்ப்பு ஏற்படும்.
தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில், "இலங்கை விமானப்படைக்கு இந்த 10 உலங்கு வானூர்திகளை வழங்குவதில் அமெரிக்கா பெருமகிழ்ச்சி அடைகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.