சுவிட்சர்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப்பெண்; அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்
சுவிட்சர்லாந்து சிறையில் இலங்கை பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் , பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை பெண் உயிரிழந்தமை தொடர்பில் நான்கு சிறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பேசல் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 2018 ஜூன் மாதம் 29 வயதான இலங்கை பெண் ஒருவர் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணமடைந்தார்.
இது தொடர்பான சம்பவம் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் கூற்றுப்படி,
வாகோஃப் ரிமாண்ட் சிறையில் உள்ள ஒரு அறையில் நடந்துள்ளது. டப்ளின் நடைமுறையின்படி குறித்த இலங்கையர் மால்டாவுக்கு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவரது புகலிட நடைமுறைக்கு மால்டா தீவு நாடுதான் பொறுப்பு என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் 12ம் திகதி கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்ட அறை ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவரது பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கவே இந்த ஏற்பாடு எனவும் கூறப்பட்டது. எனினும் குறித்த இலங்கையர் அன்று இரவு தமது மேல்சட்டையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சுமார் 4 நிமிடங்களுக்கு பின்னரே, இச்சம்பவம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வந்ததுடன், அவர்கள் மேற்பார்வை ஊழியர்களை சிறையின் குறிப்பிட்ட அறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் இரு சிறை காவலர்கள் அவரை மீட்டு மருத்துவ உதவிகளை செய்ய தவறியதாகவே கூறப்படுகிறது. மேலும், அந்த மூவரும் நான்காவது ஒரு பெண் காவலரை உதவிக்கு அழைத்துள்ளனர். இவர்கள் நால்வரும் குறித்த இலங்கையரை நிர்வாண கோலத்தில் விட்டுச் சென்றதாகவே கூறப்படுகிறது.
இதன் பின்னர் சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகே கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் சென்றுள்ளது. இதனையடுத்து சுமார் 18 நிமிடங்களுக்கு பிறகு அவசர மருத்துவ உதவிக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பித்த 2 நாட்களுக்கு பிறகு அந்த இலங்கையர் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
தற்போது குறித்த இலங்கையரை மீட்கத்தவறிய அந்த நான்கு மேற்பார்வையாளர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அதிகாரிகள் இலங்கையரின் மரணத்தை தடுத்திருக்கலாம் எனவும், அந்த நால்வரும் தங்கள் கடமையை செய்யத் தவறியதால் ஒரு உயிர் பரிதாபமாக பறிபோயுள்ளதாக அரசு தரப்பு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.