நிறுவனம் ஒன்றின் புதுவித அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி; இனி வீட்டிலும் கேமரா
கொலம்பியாவை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்றின் புதுவித அறிவிப்பால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 3.96 லட்சம் பேர் வேலை செய்து வரும் Teleperformance என்னும் நிறுவனம் அமேசான் போன்ற நிறுவனங்களினுடைய கால்சென்டராகவுள்ளது. இந்த டெலி பெர்ஃபார்மென்ஸ் எனும் நிறுவனத்தில் கொலம்பியாவிலிருந்து மட்டும் சுமார் 39,000 பேர் வேலை செய்து வருகிறார்கள்.
கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளார்கள். ஆனால் ஊழியர்கள் வீட்டில் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பது பல நிறுவனங்களுக்கும் கடினமாகவுள்ளது.
இந்நிலையில் கொலம்பியாவை மையமாகக் கொண்டு செயல்படும் டெலி பெர்ஃபார்மென்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க அவர்கள் பணிபுரியும் இடத்தில் கேமராவை பொருத்த வேண்டும் என்பதே அது.
இதற்கான ஒப்பந்தத்தில் அந்நிறுவனம் ஊழியர்களிடமிருந்து கையெழுத்து வாங்கினாலும் கூட இதுவரை எந்த ஊழியரது வீட்டிலும் அந்நிறுவனம் கேமராவை பொருத்த வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.