“மறைமுகத் தாக்குதலை நிறுத்துங்கள்” ; டிரம்புக்கு கார்னியின் கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீம்ஸ்கள் மற்றும் மறைமுகமான விமர்சனங்கள் மூலம் கனடாவை தாக்குவதை நிறுத்த வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா–கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி, ஏரியின் பெயர் மாற்றம் மற்றும் பென்டகன் வெளியிட்ட சில கேலிச் சித்தரிப்புகள் உள்ளிட்ட விடயங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளன.

இந்நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மார்க் கார்னி, அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் தீவிர கவனம் செலுத்தினால் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
கனடாவின் தொழில்துறைகள் படிப்படியாக சுருங்கி அழியும் வகையிலான நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைப்பதாகவும், அவ்வாறான நிபந்தனைகளை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள். கடுமையாக நடந்துகொள்ள முயற்சிப்பதையும் நிறுத்துங்கள்” என டிரம்ப் நிர்வாகத்துக்கு கார்னி பதிலடி கொடுத்துள்ளார்.
மற்றவர்களை குறைகூறுவதையும், தங்களை வலிமையானவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிப்பதையும் அமெரிக்கா கைவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.