பாகிஸ்தானில் செலவுகளைக் கட்டுப்படுத்தக் கடும் நடவடிக்கைகள்
அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்கும் பாகிஸ்தான் அரசு தொடர் கடும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது.
இன்று (17) வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பிரிவின் அறிவிப்பின்படி, அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருளின் அளவு 50% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆயுதப்படைகள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் கூட்டாட்சி வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளுக்கு இந்த வரம்பு பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின்படி, 2026/27 நிதியாண்டிற்கான மீண்டும் மீளாத செலவினங்களை வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மாதந்தோறும் 5% குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய வாகனங்கள் கொள்முதல் செய்வது மற்றும் சில பயன்பாட்டுப் பொருட்களை வாங்குவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த வரம்புகள் பொருந்தாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பின் அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் இதர தொடர்புடைய அதிகாரிகள் விமானங்களில் சாதாரண வகுப்பிலேயே (Economy class) பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்களின் கூட்டங்களை முடிந்தவரை காணொளி மாநாடு (Video Conference) முறையில் நடத்தவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகை தரும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்து அரசு சார்பில் அதிகாரப்பூர்வ விருந்துகளை நடத்த வேண்டாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசு நிதியில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ கருத்தரங்குகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் அரசின் கேட்போர் கூடங்கள், குழு அறைகள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ வசதிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, திருமண விழாக்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் ஒரே ஒரு வகையான உணவை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கடைகளை மூடும் நேரங்கள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சாதாரண கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 9.00 மணிக்கும், விழா மண்டபங்கள் இரவு 10.00 மணிக்கும் மூடப்பட வேண்டும்.
உணவகங்கள், கேஃபேக்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் இரவு 11.00 மணி வரை திறக்கப்பட்டிருக்கலாம் என்பதுடன், பொதி (takeaway) மற்றும் வீட்டிற்கு விநியோகம் செய்யும் (home delivery) சேவைகளுக்கு இந்த நேரக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மருந்தகங்கள், வைத்தியசாலைகள், கிளினிக்குகள், மருத்துவ விநியோகக் கடைகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், மின்சார வாகன சார்ஜிங் மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு இந்த வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தேவைப்படும் இடங்களில் தனிப்பட்ட விடயங்கள் அடிப்படையில் விலக்குகளைப் பரிசீலிக்க முடியும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.