கனடாவில் பாடசாலையில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்! பரபரப்பு சம்பவம்
கனடாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களை மாணவன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் நோவா ஸ்காட்டியா மாகாணம் - ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (20-03-2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
நேற்று முன்தினம் வழக்கம்போல் பாடசாலை வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது மாணவன் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை குத்தியுள்ளார்.
இதனால் பயந்து போன மாணவர்கள் கூச்சலிட்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர்.
இதனையடுத்து அருகில் உள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர் வந்து மாணவனை தடுக்க முயன்றார்.
அப்போது அவரையும் அந்த மாணவன் கத்தியால் குத்தியுள்ளார். மேலும் இச் சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவனுக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் பாடசாலைக்குள் விரைந்தனர்.
பொலிஸார் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.