கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கான அனுமதி 31% சரிவு
இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு கனடாவில் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கல்வி கற்பதற்கான அனுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த காலாண்டில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு சரிந்துள்ளது.
கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 முதல் காலாண்டில் இந்தியாவில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் எண்ணிக்கை 30,640 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியேற்றத் தரவுகள்
கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 44,295 ஆக இருந்தது. அதாவது இந்த ஆண்டு 31% வரை சரிந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக சர்வதேச நாடுகளில் இருந்து கனடாவில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி 2024 காலாண்டில் 1,21,070. இதுவே இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 96,015 ஆக உள்ளது.
சர்வதேச நாடுகளில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களை அனுமதிப்பதில் தொடர் சரிவையே இவை பிரதிபலிக்கின்றன. 2023 இறுதிக் காலாண்டில் இருந்து பெருமளவு வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியை கனடா குறைத்து வருவதை இது காட்டுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளில் இருந்து வந்த மாணவர்களில் 6,81,155 பேருக்கு கனடா அரசு அனுமதி அளித்தது. இதில், 2,78,045 பேர் இந்திய மாணவர்கள். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5,16,275 எனக் குறைந்தது. இதில், இந்திய மாணவர்கள் 1,88,465 பேர்.
குடியேற்றத் தரவுகளில் இருந்த குளறுபடிகள் கொள்கை மாற்றத்திற்கு வழிவகுத்தது. வீடுகளுக்கு வாடகை செலுத்த முடியாத நிலை, உடல்நலனைப் பேண வேண்டிய அழுத்தம், போக்குவரத்து போன்றவையும் பகுதியளவு காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
இதனிடையே மீண்டும் ஆட்சியைப் பிடித்து புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மார்க் கார்னி, தற்போதுள்ள நிலையே தொடரும் என உறுதிப்படத் தெரிவித்தார்.
கனடாவில் படிக்க, தொழில் புரிய, வேலைக்காக என பல்வேறு காரணங்களால் தற்காலிக குடியேற்றம் கொண்டவர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.