வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து... 5 பேர் பரிதாபமாக பலி
தென்கொரியாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் சிக்கி 4 நோயாளிகள் மற்றும் ஒரு தாதியர் என 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
தென்கொரியா தலைநகர் சியோலில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இச்சியோன் நகரில் 4 மாடிகளை கொண்ட கட்டிடம் உள்ளது. கட்டிடத்தின் 4-வது தளத்தில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கான வைத்தியசாலை செயல்பட்டு வருகிறது.
2-வது, 3-வது தளங்களில் அலுவலகங்களும், முதல் தளத்தில் ஓட்டல்களும் உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலை 4-வது தளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்தியசாலை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
அதை தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்த மருத்துவ ஊழியர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்ற தொடங்கினர்.
இருப்பினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 நோயாளிகள் மற்றும் ஒரு நர்சு என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.
வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளும், நர்சும் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.