ஹவுதிகளின் திடீர் எழுச்சியால் உலக பொருளாதாரத்துக்கு பேராபத்து?
ஈரான் - இஸ்ரேல் போர் ஆரம்பமாகி நான்கு வாரங்கள் அமைதி காத்த ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தற்போது இஸ்ரேலை நோக்கி இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற இந்த அமைப்பின் திடீர் நகர்வு, உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை விடவும், ஏமன் கடற்கரையோரம் ஹவுதிகள் ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலே சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக காசா போரின் போது, செங்கடலின் தெற்கு முனையில் உள்ள பாப் அல்-மந்தப் (Bab al-Mandab) நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை ஹவுதிகள் இலக்கு வைத்தனர்.
தற்போது மீண்டும் அத்தகைய நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கினால், சர்வதேச கடல்வழி வர்த்தகம் முற்றாக முடங்கும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே ஈரான் 'ஹோர்முஸ்' (Strait of Hormuz) நீரிணையை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சூழலில், தற்போது ஹவுதிகளும் 'பாப் அல்-மந்தப்' பகுதியை முடக்கினால், உலகின் மிக முக்கியமான இரண்டு மூலோபாய நீரிணைகளும் துண்டிக்கப்படும்.
இது உலகப் பொருளாதாரத்திற்கு மீள முடியாத பேரிடியாக அமையும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.