இந்தோனேசியாவின் 200 ஆக்சிஜன் செறிவூட்டல்கள் இந்தியா வந்தடைந்தது
இந்தியாவிற்கு இந்தோனேசியா அனுப்பி வைத்த 200 ஆக்சிஜன் செறிவூட்டல்கள் வந்தடைந்தது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
அந்த வகையில் ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, பெல்ஜியம், ஜப்பான், ருமேனியா, லக்சம்பர், சிங்கப்பூர், போர்ச்சிகல், ஸ்வீடன், நியூசிலாந்து, குவைத் உள்பட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவி வழங்கியுள்ளன. அந்த வரிசையில், இந்தியாவுக்கு 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்தோனேசியா வழங்கியுள்ளது.
இந்தோனேசியா அனுப்பிய ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்பட மருத்துவ உதவிப்பொருட்கள் விமானம் மூலம் இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தன.
இரு நாட்டு உறவையும் மேலும் வலுப்படுத்தும் விதமாக 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்தோனேசியா அனுப்பியுள்ளதை வரவேற்கிறோம் என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.