கட்டுக்கடங்காத காட்டுத்தீ; திணறும் அல்ஜீரியா; உலக நாடுகளிடம் முன்வைத்த கோரிக்கை
உலகின் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு பல்வேறு அறியவகை மரங்கள், வன உயிரினங்கள் அழிந்துள்ளதுடன் சில நேரங்களில் காட்டுத்தீயை கட்டுபடுத்த இயலாமல் போவதால் இழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன.
இந்நிலையில், அல்ஜீரியாவில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் செய்வதறியாது அந்நாட்டு அரசு திகைத்துள்ள நிலையில் தீயை கட்டுப்படுத்த உதவுமாறு அல்ஜீரய பிரதமர் பிறநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு ஆப்பிரிக்க நாடன அல்ஜீரியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் அனைத்து திசைகளிலும் பரவ ஆரம்பித்ததுடன் வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் கபிலை என்ற மாநிலத்தில் உள்ள டிஸி ஓசோ நகருக்குள் தீ பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் விரைவாக நகரை விட்டு வெளியேறினர்.
இருப்பினும் சில நிமிடங்களில் நகரில் உள்ள அனைத்து வீடுகளும் தீக்கிரையாகின. சுற்றியுள்ள பகுதிகளிலும் தீ வேகமாக பரவி வருவதால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படனர்.
இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வரும் நிலையில் அல்ஜீரிய ராணுவமும் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. எனினும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தீ மளமளவென பரவி வருகிறது.
இதனால் இந்த காட்டுதீயை அணைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அல்ஜீரய பிரதமர் அய்மான் இந்த தீயை அணைப்பதற்கு பிற நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இந்த தீயில் சிக்கி இதுவரை 42 பேர் பலியானதுடன், அதில் தீயணைப்பு பணியில் ஈடுப்பட்ட 25 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.