இப்படித்தான் இருக்க வேண்டும்; மாணவிகளிற்கான புதிய விதிமுறைகளை அறிவித்த தலிபான்!
ஆப்கானில் பல்கலைகழகங்கள் பாலின அடிப்படையில் பிரிக்கப்படும் பெண்கள் ஆண்களுடன் இணைந்து கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என உயர் கல்வி அமைச்சர் அப்துல் பாஹி ஹக்கானி தெரிவித்துள்ளார்.
பெண்கள் உயர்கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆனால் ஆண்களுடன் இணைந்து அல்ல என அவர் கூறினார். மாணவர்களிற்கான பாடங்கள் குறித்து மீளாய்வு இடம்பெறும் என தெரிவித்த அவர், மாணவிகளிற்கான ஆடை குறித்தும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் ஆண்களும் பெண்களும் இணைந்து கல்வி கற்கும் முறையை மாற்றுவது குறித்து எங்களிற்கு எந்த தயக்கமும் இல்லை எனவும், மக்கள் முஸ்லீம்கள் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதியளவு பெண் ஆசிரியர்கள் உள்ளனர் அவ்வாறு அவர்கள் போதியளவில் இல்லாதபட்சத்தில் மாற்றீடுகளை உருவாக்குவோம், ஆண் ஆசிரியர்கள் திரைச்சீலைக்கு அப்பாலிருந்து அல்லது தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கற்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலைகளிலும் ஆண்கள் பெண்கள் என பிரிக்கப்படுவது இடம்பெறும் பெண்கள் ஹிஜாப் அணியவேண்டும் எனவும் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.