தலிபான்கள் அரசு குறித்து நாளை அறிவிப்பு; தலைவராக ஹெபதுல்லா
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைக்கும் அரசு குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்றும் தலிபான் தலைவராக உள்ள ஹெபதுல்லா அகுன்சடா-வே அந்நாட்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானி்ஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் முற்றிலும் வெளியேறிவிட்ட நிலையில் நாடு முழுமையும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதையடுத்து அந்நாடு எப்படி நிர்வகிக்கப்பட உள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் காபூலில் பேசிய தலிபான் அமைப்பின் கலாசார குழு உறுப்பினர்களில் ஒருவரான அனுமுல்லசா சமங்கினி, தங்கள் இயக்கத்தின் தலைவரே நாட்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்பார் என தெரிவித்தார்.
அத்துடன் தாங்கள் அமைக்க உள்ள அரசு ஒரு முன்னுதாரண அரசாக திகழும் என தெரிவித்த அவர் பிரதமர் பதவியும் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். தலிபான்களின் அரசியல் பிரிவு தலைவரான முல்லா பரடர் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதற்கு அல் கய்தா அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும், காஷ்மீர், பாலஸ்தீன் உள்ளிட்ட பகுதிகளை ஆயுதம் தாங்கிய விடுதலைப் போரின் மூலம் மீட்க வேண்டும் என வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாகவும் லாங் வார் ஜர்னல் என்ற அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.