"நான் ஒருபோதும் தலிபான்கள் முன் அடிபணிவதில்லை" - ஆப்கானிஸ்தான் துணை அதிபர்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால், பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்துள்ளனர். அதிகாரமும் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது. தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய நிலையில் அதிபர் அஷ்ரப் கனி தஜிகிஸ்தான் சென்றுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சலே கூறும்போது, எந்தவொரு சூழலிலும், ஒருபோதும் தலிபான் பயங்கரவாதிகள் முன் நான் அடிபணிவதில்லை. வழிகாட்டி, தளபதியாக இருந்த என்னுடைய ஹீரோவான அகமது ஷா மசூத்துக்கு நான் ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன் என கூறியுள்ளார்.