கன்னி பெண்களின் மௌனம் சம்மதம் ; சர்ச்சையை கிளப்பிய தலிபானின் புதிய சட்டம்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிராக கெடுபிடிகளை காட்டி வரும் தலிபான் அரசு, திருமணம், விவாகரத்து, குழந்தை திருமணம் உள்ளிட்ட 31 விதிகளைக் கொண்ட சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
புதிய விதியின்படி, பருவமடைந்த ஒரு 'கன்னிப் பெண்' திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தால், அதுவே அவரது சம்மதமாகக் கருதப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் அமெரிக்க ராணுவம் வெளியேறியதை அடுத்து ஆட்சி பொறுப்பு தலிபான் வசம் சென்றது. அப்போது முதல் அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக இயற்றப்பட்டு வருகின்றன.
உயர்கல்வி கற்கத் தடை, வேலைவாய்ப்புகளுக்குத் தடை, பொது இடங்களுக்கு வரக் கட்டுப்பாடு எனப் பெண்களின் சுதந்திரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச அளவிலும், மனித உரிமை அமைப்புகளிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள வகையில் புதிய சட்டம் ஒன்றிற்கு, அந்நாட்டு உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய விதியின்படி, பருவமடைந்த ஒரு 'கன்னிப் பெண்' திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தால், அதுவே அவரது சம்மதமாகக் கருதப்படும். குழந்தை திருமணங்களை நடத்துவதில் தந்தை மற்றும் தாத்தா ஆகியோருக்கு இந்த சட்டம் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குகிறது.
மணமகன் சமூக அந்தஸ்தில் தகுதியானவராகவும், வரதட்சணை ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருந்தால் இத்திருமணம் செல்லும்.
மேலும் குழந்தை பருவத்தில் செய்து வைக்கப்பட்ட திருமணத்தை, அவர்கள் பெரியவர்களான பிறகு ரத்து செய்ய விரும்பினால், இஸ்லாமிய சட்டமான 'கியார் அல்-புலுக்'படி தலிபான் நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் இந்த புதிய சட்டத்திற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.