கனடா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்
பாதுகாப்பு அர்ப்பணிப்புகளில் கனடா நம்பகமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டது என்று கூறி, அந்நாட்டுடன் பல தசாப்தங்களாகச் செயல்பட்டு வரும் நிரந்தரக் கூட்டுப் பாதுகாப்பு சங்கத்தை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி எல்ப்ரிட்ஜ் கோல்பி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
வட அமெரிக்காவின் கூட்டுப் பாதுகாப்பிற்கு இந்த அமைப்பு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை மறுமதிப்பீடு செய்வதற்காக இந்த வாரியம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கனடாவின் வெற்றுப் பேச்சுக்களுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை இனி அமெரிக்காவால் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் சாடியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள முறிவு குறித்துப் பேசிய உரையை சுட்டிக்காட்டி கோல்பி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வாரியம், அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான மிக முக்கிய ஆலோசனை அமைப்பாகும். ஈரான் மோதல் மற்றும் ஹார்முஸ் நீரிணைப்பு (Strait of Hormuz) மூடப்பட்டதால் உலகளவில் புவிசார் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள இந்தச் சூழலில், அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தற்போதைய பிரதமர் மார்க் கார்னி கனடாவின் பாதுகாப்புச் செலவினங்களை கணிசமாக அதிகரித்து, நேட்டோ (NATO) அமைப்பின் இலக்குகளையும் தாண்டிச் செயல்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கனடாவின் முன்னாள் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் எரின் ஓ'டூல் (Erin O’Toole) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய சீனா சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, இத்தகையதொரு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு "முற்றிலும் தவறானது" என்று அவர் விமர்சித்துள்ளார்.