காபூல் விமான நிலையத்தை மூடி சீல் வைத்த தலிபான்கள்!
நேட்டோவின் இறுதி விமானங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ள நிலையில், நாட்டை விட்டு பெருந்திரளான மக்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் தலிபான்கள்காபூல் விமான நிலையத்தை மூடி சீல் வைத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு விமான நிலையத்திற்குச் செல்லும் பாதைகளில் புதிய அடுக்கு சோதனைச் சாவடிகள் வைக்கப்பட்டு சீருடை அணிந்த தலிபான் போராளிகள் இரவு நேரக் கண்காணிப்புகளிலும் ஈடுப்பட்டு வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஆகஸ்ட் 31 வரை தலிபான்களின் விடுத்த காலக்கெடுவை முன்னிட்டு அமெரிக்கா தலைமையிலான பாரிய விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளை வெளியேற்றும் இத்தாலியின் இறுதி விமானம் ரோம் லியோனார்டோ டா வின்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இத்தாலிய விமானப்படையின் சி -130 ஜே ரக விமானம் 58 ஆப்கானிஸ்தான் குடிமக்களுடன் சனிக்கிழமை காலை, காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், காபூல் விமான நிலையத்தில் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் அடுத்த 24-36 மணிநேரங்களில் அதிக வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தார்.
மேலும் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் வெளியேறும் கடைசி விமானங்களில் அங்கிருந்து வெளியேற தீவிர முயற்சிகளில் ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் விமான நிலையத்தின் எல்லைக்கு வெளியே முகாமிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.