தமிழின அழிப்பு நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுத்தூபி இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தமிழர் அழிப்பு நினைவுதூபி அமைப்பதற்கு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் முக்கிய முன்னெடுப்புகள் இடம்பெற்றது. அந்த குழுவில் நானும் ஒரு முக்கியமான உறுப்பினராக இருந்துள்ளேன்.
உலகம் முழுதும் நினைவுச் சின்னங்கள் எழுந்து கொண்டே இருக்கும்
இந்நிலையில் நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை அறிந்து மிகவும் மனமுடைந்து போனேன். இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டவர்களை கனடா அரசாங்கம் தண்டிக்க வேண்டும்.
எங்களுடைய உறவுகளை அழிக்கலாம், எங்களுடைய நினைவுச் சின்னங்களை தகர்க்கலாம். ஆனால் எங்களுடைய நினைவுகளை ஒருபோதும் அழிக்க முடியாது. இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் நினைவுச் சின்னங்கள் உலகம் முழுதும் எழுந்து கொண்டே இருக்கும்.
இதனை எவனாலும், எமனாலும் கூட தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எங்களுடைய மக்களை அழித்துவிட்டு அவர்களை நினைவுகூருகின்ற நினைவுத் தூபிகளையும் சேதப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
நினைவு சின்னங்களையே அழிக்க வேண்டும் என நினைக்கும் இலங்கை அரசானது தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என நாங்கள் எவ்விதம் நம்புவது? எனவே இவ்வாறான விடயங்கள் குறித்து சர்வதேசம் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்துவதற்கு அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்றும் இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார்.