14 வயதில்.. உலக தலைவர்களுக்கு பாடம் கற்பித்த தமிழக சிறுமி! குவியும் வாழ்த்துக்கள்
OP26 climate summit நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தமிழக சிறுமியின் உரை அனைவரையும் கவர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் வினிஷா உமாசங்கர்(14). இவர் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் சூரிய மின்சக்தியை பயன்படுத்தி தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து இவரது கண்டுபிடிப்பு இளவரசர் வில்லியம் அறக்கட்டளை சார்பில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் COP26 climate summit நிகழ்வில் தூய்மை தொழில்நுட்பம் குறித்து பேச வினிஷாவுக்கு இளவரசர் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன் பேரில் மாநாட்டில் வினிஷா பேசியதாவது, இன்று நான் உங்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செய்யத் தொடங்குங்கள்.
பழைய விவாதங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை நமக்குத் தேவை. எனவே எங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். எனது தலைமுறையில் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர்.
மேலும் நாங்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் எனக்கு கோபம் கொள்ள நேரமில்லை. நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல.
பூமியை சேர்ந்த பெண்ணும் தான். நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்தார். இந்த சிறுமியின் பேச்சு அனைவரையும் பெரிய அளவில் கவர்ந்துள்ளது.