மகளின் திருமணத்தில் தோற்றிய உயிரிழந்த தந்தை! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தருணம்
தமிழகத்தில் உயிரிழந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி - திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (56). கடந்த மார்ச் மாதம் 3-ம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஷ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் வைத்து நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் இன்று (03-06-2022) திருமணம் நடந்துள்ளது.
உயிருடன் இருக்கும் போது மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என செல்வராஜ் விரும்பியிருந்தார்.
இந்நிலையில் தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகள் தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என வருத்தத்தில் இருந்துள்ளார்.
தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், பத்மாவதி குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் செலவில் செல்வராஜின் மெழுகு சிலையை உருவாக்கி, அவருக்கு பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோன்ற மெழுகுசிலை தத்ரூபமாக வடிவமைத்தனர்.
இந்த சிலையை புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது.
அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மகேஸ்வரி, தந்தை செல்வராஜியின் மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
இதை கண்டு திருமண மண்டபத்துக்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சியடைந்ததுடன் மணமகளை தேற்றியுள்ளனர்.