மருந்துப் பொருட்கள் மீதும் விரைவில் வரி உயர்வு ; உலகை மிரட்டும் ட்ரம்ப்
மருந்துப் பொருள்கள் மீதான வரி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மருந்துப் பொருள்களின் உற்பத்தி அதிக அளவு இல்லையென்றாலும், மருத்துவத் துறை வணிகத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.
மருத்துவ இறக்குமதிகளுக்கு வரி
இதனால், மற்ற நாடுகளின் மருத்துவ இறக்குமதிகளுக்கு விரைவில் புதிய வரியை டிரம்ப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினருக்கான நிதி திரட்டும் விழாவின் இரவு உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி டிரம்ப், ''புதிய வரி விதிப்பின் மூலம் உலக நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன.
இது அமெரிக்காவுக்குக் கிடைத்த வெற்றி. விரைவில் மருந்துப் பொருட்களுக்கான வரி உயர்வை எதிர்பார்க்கலாம். மருந்துப் பொருட்களின் விற்பனை சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிப்பதால், இந்த விலையேற்றத்தால் உலக நாடுகள் நம்மிடம் வரவேண்டிய நிலை ஏற்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மருந்து உற்பத்தி கணிசமாக இல்லாதது குறித்து நீண்ட காலமாக அமெரிக்கா வருந்திவரும் நிலையில், நாட்டிற்குள் அதிக மருத்துவத் துறை உற்பத்திகளைக் கொண்டுவர வரிகளை உயர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
எஃகு, அலுமினியம், ஆட்டோமொபைல், தாமிரம் மற்றும் மின்னணு சில்லுகள் (சிப்) உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஏற்கனவே வரி உயர்வை அறிவித்துள்ள நிலையில், விரைவில் மருந்து பொருள்களுக்கும் புதிய வரி விதிக்கப்படும் என்ற டிரம்ப்பின் அறிவிப்பு சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.