ரொறன்ரோ பள்ளி ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் முக்கிய திருப்பம்
ரொறன்ரோவில் அனைத்து ஆண்கள் கத்தோலிக்கப் பள்ளி ஒன்றில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மாணவர் ஒருவருக்கு இன்று தண்டனை வழங்கப்பட உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையில், மாணவன் ஒருவன் குற்றவாளி என கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. கடந்த 2018ல் ரொறன்ரோவின் பிரபலமான புனித மைக்கேல் பள்ளியில் மாணவன் ஒருவரை சக மாணவர்கள் கும்பல் ஒன்று பலாத்காரத்திற்கு உட்படுத்தியது.
ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளதும், சித்திரவதைக்கு உட்படுத்தியதும் பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கின் விசாரணையில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மாணவன் மூன்று மாதங்கள் வரையில் சிறைத்தண்டனைக்கு விதிக்கப்பட வேண்டும் எனவும், இது வன்முறை மட்டுமல்ல அவமானகரமான சம்பவம் எனவும் அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
ஆனால், சிறைத் தண்டனை இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தகுதிகாண் தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறித்த மாணவன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் மேலும் நான்கு மாணவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் மாணவர்களுக்கான ஓய்வறையில் வைத்து சக மாணவன் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலானது மொபைல்போனில் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இந்த நிலையிலேயே நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையை முன்னெடுத்தனர்.