ஈரான்–இஸ்ரேல் பதற்றம் தீவிரம் ; இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகளை ஏவியது ஈரான்
ஈரானில் இருந்து இஸ்ரேலை இலக்கு வைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இஸ்ரேலை நோக்கி வரும் ஈரானிய ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிப்பதற்காகத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக இயங்கி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால் தங்களது படைகள் 'தயார் நிலையில்' (High alert) வைக்கப்பட்டிருந்ததாக இராணுவம் சில நிமிடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தது.
லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய கொடிய தாக்குதலுக்குப் பழிவாங்கப்படும் என்று ஈரானிய உயர் அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையிலேயே, இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லெபனான் எல்லைக்கு அருகாமையிலும், வடக்கு இஸ்ரேலிலும் உள்ள இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மற்றும் படையினரின் இலக்குகளைக் குறிவைத்து தொடர்ச்சியான ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஈரானில் இருந்து ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் விமானப்படை இதுவரை இடைமறித்துள்ளது, என்று கூறியுள்ள இஸ்ரேல் இராணுவம், இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட கூடுதல் ஏவுகணைகளையும் அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.