அமெரிக்க மருத்துவமனையில் பயங்கரம்; மூவர் ஆபத்தான நிலையில்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வைத்தியசாலை ஒன்றுக்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். San Fernando Valley வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலை வளாகத்தில் உள்ள Ventura Boulevard 16000 தொகுதியில் கத்திக்குத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர் மாலை 5 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எனினும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. இதேவேளை, அண்மைய நாட்களாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான தொடர் வன்முறை சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
