தாலிபான்களுடன் இந்திய அதிகாரிகள் திடீர் சந்திப்பு
தாலிபான் பிரதிநிதியை கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் சந்தித்து பேசினார்.
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை அடுத்து, அந்த தாக்குதலில் ஈடுபட்ட பின்லேடனை அழிப்பதற்காக அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்தது. கடந்த 20 வருடமாக அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், தாலிபான்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் வெளியேறுவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்திருந்ததை அடுத்து, அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இதையடுத்து அங்குள்ள வெளிநாட்டினர் கடந்த சில நாட்களாக தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வந்தனர். ஆப்கானிஸ்தானியர்களும் தலிபான்களுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். இன்னும் பலர், காபூல் விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கூறப் படுகிறது. இன்றுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க ராணுவ வீரரும் வெளியேறி விட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிவித்தது.
இந்நிலையில், கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல்- தலீபான்களின் அரசியல் பிரிவு தலைவர் அப்பாஸ் ஸ்டானெக்ஸாயை தோஹாவில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.