இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திய தலிபான்கள்
தலிபான்கள் இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக ஏற்றுமதி அமைப்பு ( FIEO ) தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் தொடர்ந்து முன்னேறி வந்த நிலையில் தற்போது நாடு முழுவதையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவுடனான வர்த்தகத்தை தற்போது தலிபான்கள் நிறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானூடே ஆப்கானிஸ்தானுக்கு வணிக வர்த்தகம் மேற்கொள்ளும் வழியை நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பு கூட்டமைப்பின் பொது இயக்குநர் அஜய் சாய், தெரிவித்துள்ளார். மேலும், "நாங்கள் ஆப்கனில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உண்ணிப்பாக கவனித்து வருகிறோம். தற்போது வர்த்தகம் நடைபெறும் பாதையை தலிபான்கள் முடக்கியுள்ளனர்.
" என்றும் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் ஆப்கனுக்குமான வர்த்தகம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. குறிப்பாக முதலீடுகளில் நல்லுறவை பேணி வருகிறது. "நாம் ஆப்கனின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளில் ஒருவர். 2021ம் ஆண்டில் ஆப்கனுடனான ஏற்றுமதி வர்த்தக மதிப்பு 835 மில்லியன் அமெரிக்கன் டாலராகும். அதே போல இறக்குமதி வர்த்தக மதிப்பானது 510 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
அதே போல 3 மில்லியன் டாலர் அளவிற்கு 400 திட்டங்களில் ஆப்கனில் முதலீடுகளை செய்துள்ளோம்." என்றும் கூறியுள்ளார். பாகிஸ்தான் வழித்தடத்தில் வர்த்தகம் தடைபட்டுள்ள நிலையில், வடக்கு-தெற்கு சர்வதேச போக்குவரத்து பாதையிலும், துபாய் வழியாகவும் வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து, சர்க்கரை, மருந்துகள், ஆடைகள், தேயிலை மற்றும் காப்பி கொட்டைகள் ஆகியவை ஏற்றுமதிகள் செய்யப்படுகின்றன. அதே போல, வெங்காயம் போன்றவை ஆப்கனிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த வர்த்தக உறவில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.