பாரிஸ் பிஹால் தொடருந்து நிலையத்தில் தனக்குத் தானே தீ மூட்டி எரிந்த நபரால் பரபரப்பு!
பாரிஸ் பிஹால் (Pigalle) மெற்றோ ரயில் நிலையத்தின் பயணிகள் மேடையில் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டதல் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
நேற்று மாலை ஆறு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதன் காரணமாக சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. சுமார் எண்பது வீதமான உடற்பகுதிகள் எரியுண்ட நிலையில் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்ட அவர்,ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பயணிகளில் ஐந்து பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
அந்த நபர் பயணிகள் மேடையின் தரையில் எரிந்து புரண்டுகொண்டு கிடந்த வேளை ரயில் ஒன்று அங்கு வந்து தரித்தது. அதில் வந்த பயணிகள் தீயில்ஒருவர் எரியும் காட்சியை அருகே நேரில் கண்டு அலறத் தொடங்கியதனால்அனைத்துப் பயணிகளும் வெளியேற்றப்பட நேர்ந்ததுடன் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உளவியல் சிகிச்சை வழங்கப் பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, நான் ரயிலில் இருந்தேன். திடீரென பலரும் அலறும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தேன். மேடையில் பெரும் தீப்பிளம் பைக் கண்டேன். ரயில் கிளம்பவில்லை. சிலர் அழுது கொண்டு இறங்கி ஓடினர். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என பயணி ஒருவர் பரிஷியன் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நபர் உடல் முழுவதும் பெற்றோல் ஊற்றி நனைத்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு வந்து அங்கு வைத்து அவர் தனக்குத் தீ மூட்டியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் இவ்வாறு தற்கொலைக்கு முயன்றவர் யார் என்ற விவரங்கள் உடனடியாகத்தெரியவரவில்லை.
மேலும் இந்தச் சம்பவம் காரணமாக மெற்றோ வழித்தடங்கள் 2, 12 ஆகியவற்றில் சேவைகள் சில மணிநேரம் தடைப்பட்டதாக போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.