அமெரிக்க தூதரகத்தில் இறக்கப்பட்ட தேசியக்கொடி; ஊழியர்கள் வெளியேற்றம்!
ஆப்கான் காபூல் தூதரகத்தில் உள்ள அமெரிக்க கொடி இறக்கப்பட்டு, ஊழியர்களும் விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை ஆகியவை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
ஆப்கானிஸ்தானில் இருந்து சிவில் மற்றும் இராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்கா மற்றும் கூட்டாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தைப் பாதுகாப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை நிறைவு செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த 48 மணி நேரத்தில், நாங்கள் எங்கள் பாதுகாப்பு இருப்பை கிட்டத்தட்ட 6,000 படையினருக்கு விரிவுபடுத்துவோம், இந்த முயற்சிகளை எளிதாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்களையும், காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உள்ளூர் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய ஆப்கானிஸ்தான் நாட்டினரை அமெரிக்கா நாட்டை விட்டு வெளியேற்றும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை வரை சுமார் 4,200 பேர் அமெரிக்க தூதரகத்தில் இருந்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.