மனைவியைப் பிரிந்த நபர்... விவாகரத்துக்கு காத்திருந்த நிலையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்
கனேடியர் ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு முன் தன் மனைவியைப் பிரிந்த நிலையில், விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். விவாகரத்து கிடைத்துவிடும் என்று காத்திருந்த நிலையில், தன் விவாகரத்து விண்ணப்பமே நீதிமன்றம் சென்று சேரவில்லை என்பது தெரியவர, ஏமாந்து போயிருக்கிறார் அவர். 2017ஆம் ஆண்டு தன் மனைவியைப் பிரிந்தார் Aaron Penman.
சில நாடுகளில், வழக்குக்காக சட்டத்தரணி ஒருவரை அணுகுவதற்கு பதில், Paralegal என்பவரை அணுகுகிறார்கள். இந்த Paralegal என்பவர் தனது கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தில் வாதாடுவார், ஆனால், அவர் முழுமையான சட்டத்தரணி கிடையாது.
ஒரு சட்டத்துறை உதவியாளர் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட சட்டத்துறை உதவியாளரான Nyasha (Nash) Muyambo என்பவரை தனது விவாகரத்து வழக்குக்காக அணுகியுள்ளார் Aaron.
தனது வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருப்பதாக நம்பிக்கொண்டிருந்த Aaron, ஒரு நாள் நீதிமன்றத்துக்கு போன் செய்து விசாரிக்க, அப்போதுதான் தன் பெயரில் விவாகரத்து வழக்கு பதிவு செய்யப்படவே இல்லை என்ற உண்மை தெரியவர அதிர்ச்சியடைந்துள்ளார் Aaron. இதற்கிடையில், Muyambo போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, தங்கியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார்.
பின்னர் Aaron ஆல்பர்ட்டா சட்டத்துறை உதவியாளர் கூட்டமைப்பை அணுக, Muyambo அந்த கூட்டமைப்பில் உறுப்பினரே அல்ல என்பது தெரியவந்துள்ளது. பொலிசாரிடம் உதவி கோரியபோது, செலவிட்ட பணத்தை திரும்பக் கோர வழக்கு வேண்டுமானால் தொடுக்கலாம், அப்படியே வழக்குத் தொடுத்தாலும், Muyambo தன்னை ஏமாற்றிய தொகையைவிட, தான் அதிகம் செலவிடவேண்டியிருக்கும் என்பதை அவர்கள் மூலம் தெரிந்துகொண்டுள்ளார் Aaron.
இதற்கிடையில், இதேபோல வேறு சிலரை ஏமாற்றியதற்காகவும், மோசடி வழக்கு ஒன்று தொடர்பாகவும் பொலிசார் Muyamboவைத் தேடி வருவதும் தெரியவந்துள்ளது. ஆக, விவாகரத்துக்காக முயற்சித்து, பணமும் செலவு செய்தும் இன்னமும் மணமானவர் என்ற நிலையிலேயே தொடரவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் Aaron.