வேகமாக பரவும் மற்றொரு வைரஸ்: WHO விடுத்துள்ள எச்சரிக்கை
மார்பர்க் வைரஸ் தொற்றுக்குள்ளான வெளவால் போன்ற விலங்குகள் மூலம், மனிதர்களுக்கும் இதன் தொற்று ஏற்படும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.
சமீபத்தில், 'மார்க்பர்க்' என்ற வைரசால் ஆப்பிரிக்காவிலுள்ள கானாவில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதன் பாதிப்பு எபோலா வைரஸை போன்று கடுமையாக இருக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு (World Health Organization) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,,
"கானாவில் மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் இந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
எனினும், செனகலில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இந்த முடிவு உறுதி செய்த பின்பே, இதை உறுதிப்படுத்த முடியும்" எனக் கூறியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
"இவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையில், இந்த வைரஸ் தொற்று உறுதியானால், மேற்கு ஆப்பிரிக்காவில் மார்க்பர்க் வைரசால் பாதிக்கப்பட்ட இரண்டாவது பாதிப்பு பொதுவாக இருக்கும்.
இதற்கு முன்னர், கடந்த ஆண்டு கினியாவில் ஒருவருக்கு மார்க்பர்க் வைரஸ் உறுதியானதும், அதன் பிறகு வேறு யாருக்கும் இந்த தொற்று கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், சோதனை முடிவு வருவதற்கு முன்பே, தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
1967 முதல் இதுவரை 12 முறை கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும், இதன் இறப்பு விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 88 சதவீதமாக வைரஸின் தீவிர தன்மையைப் பொறுத்து மாறியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மார்பர்க் வைரஸ் தொற்றுக்குள்ளான வெளவால் போன்ற விலங்குகள் மூலம், மனிதர்களுக்கும் இதன் தொற்று ஏற்படும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.
தொற்றுக்குள்ளான மனிதர் மூலம் பிறருக்கும் இந்த வைரஸ் பரவும். வெளவால்கள் வசிக்கும் குகைகள் போன்ற பகுதிகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும், அசைவ உணவுகளை நன்கு சமைத்து உண்ண வேண்டும் என்றும் கானா மக்களுக்கு அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.