அமெரிக்காவில் 3 வயது மகனால் தாய்க்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் சிறுவன் ஒருவர் தனது தந்தையின் துப்பாக்கியை கையில் எடுத்து விளையாடியதில் தவறுதலாக குண்டு பாய்ந்ததில் சிறுவனின் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில், கடந்த சனிக்கிழமை மாலை நடந்த விபத்தில் பெற்ற தாயை 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற தினத்தன்று, டீஜா பென்னட்(Deeja Bennett) 22 வயது என்ற பெண்மணி, ஷாப்பிங் முடித்துவிட்டு தனது மகனை காரின் பின் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, அவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்ட தயாராகி கொண்டிருந்தார்.
அப்போது அந்த சிறுவன், காரின் பின் இருக்கையில் இருந்த தனது தந்தையின் துப்பாக்கியை கையில் எடுத்து விளையாடியதில் தவறுதலாக குண்டு பாய்ந்தது.
அதில் காரின் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த பென்னட்டின் முதுகுப்பகுதியில் குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அருகிலிருந்த சிகாகோ பல்கலைக்கழக மருத்துவ மையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் அந்த சிறுவனின் தந்தை, ரோமல் வாட்சன்(Rommel Watson) 23 வயது மீது குற்ற வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அவர் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியை காரில் கொண்டு சென்றுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்திலிருந்து மீண்டு வர அந்த குழந்தைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனை கொடுத்து வருகிறோம். ஒரு நொடியில் வாழ்க்கையே மாறிவிட்டது என்று டால்டன் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது அமெரிக்காவில் 2015 மற்றும் 2021 க்கு இடைபட்ட காலத்தில், 2,070 குழந்தைகள் தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர், இதன் விளைவாக 765 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 90% வழக்குகளில் குழந்தைகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.