செட்டெபெல்லோ கப்பல் மீது தாக்குதல்; அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம்
ஓமான் கடலோரப் பகுதியிலுள்ள ஹார்முஸ் நீரிணை வழியாக ஈரான் துறைமுகத்திற்குச் செல்ல முயன்ற, பலாவ் நாட்டுக்கொடி பொருத்தப்பட்ட 'செட்டெபெல்லோ' என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இக்கப்பலில் இருந்த 28 மாலுமிகளில் 24 பேர் இந்தியர்கள். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.

3 இந்தியக் கப்பல்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதல்
அமெரிக்க இராணுவத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் ஹார்முஸ் நீரிணைப் பகுதியைக் கடக்க முயன்றதால், கப்பலின் இயந்திர அறை (இன்ஜின்) மீது குண்டு வீசி அதனை முடக்கியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் ட்ரோன் தாக்குதலே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஈரான் இந்தத் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளது.
அமெரிக்கா தனது கடல்சார் கொள்ளை பழக்கத்தினாலும் ஒரே வாரத்திற்குள் 3 இந்தியக் கப்பல்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதலினாலும் தான் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன என கூறியுள்ளது.
பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பவே அமெரிக்கா இந்த வீண் பழியை ஈரான் மீது சுமத்துவதாக ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்திய மாலுமிகள் மீதான இந்தத் தாக்குதலுக்கு டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்த மாலுமிகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி அரசு துணையாக நிற்கும் என்றும், மீட்கப்பட்ட மற்ற இந்திய மாலுமிகளை உடனடியாக தாயகம் திருப்பவும், உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிச்சடங்கிற்காக இந்தியாவுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.