கால் வைக்க கூட இடமில்லை; குளிக்க முடியாமல் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு
க்ரிமியன் தீபகற்ப கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் குவிந்துள்ளதால் கால் வைக்க கூட இடமில்லை என சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
கருங்கடல் பகுதியில் உள்ள க்ரிமியன் தீபகற்பத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக க்ரிமியன் தீபகற்ப கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் குவிந்துள்ளன.
இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வறண்ட வானிலை காரணமாக ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் நன்னீரின் அளவு குறைந்து உப்பு படலங்கள் அதிகளவில் காணப்படுவதன் காரணத்தினால் ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையில் கிளிஞ்சல்கள் மற்றும் சிப்பிகள் குவிந்து கிடப்பதை போல ஜெல்லி மீன்கள் ஒரே இடத்தில் குவிந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.