கனடிய மண்ணில் புதிய சரித்திரம்: உலக சாதனை படைக்கத் துடிக்கும் கனடியர்!
கனடாவின் சஸ்காச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 56 வயதான கென்னி சாப்ளின் என்பவர், உலக சாதனைப் புத்தகத்தில் மீண்டும் தனது பெயரைப் பொறிக்கக் களம் இறங்கியுள்ளார்.
ஒரே நாளில் ஒரு காட்டை உருவாக்க முடியுமா? "முடியும்" என்று நிரூபித்துக் காட்டி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கனடியர்களின் அசாத்திய உழைப்பிற்கும், இயற்கை மீதான அர்ப்பணிப்பிற்கும் மகுடம் சூட்டும் வகையில், 24 மணி நேரத்தில் 24,000 மரக்கன்றுகளை நட்டு புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் மாபெரும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

ரெஜினா நகரின் வடமேற்கே அமைந்துள்ள 'புவெனா விஸ்டா' பகுதியில் இந்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் 24,000 மரங்களை நடுவது என்பது, சராசரியாக ஒவ்வொரு 3.6 வினாடிக்கும் ஒரு மரக்கன்றை மண்ணில் நட வேண்டும் என்ற அசாத்திய இலக்கைக் கொண்டது. ஏற்கனவே கடந்த 2001-ஆம் ஆண்டில் 17 மணி நேரத்தில் 15,170 மரக்கன்றுகளை நட்டு கென்னி சாப்ளின் உலக சாதனை படைத்திருந்தார்.
ஆனால், 2021-ல் மற்றொரு போட்டியாளர் 23,060 மரங்களை நட்டு சாப்ளினின் சாதனையை முறியடித்தார். தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு, இழந்த தனது மகுடத்தை மீண்டும் மீட்கும் முனைப்பில் சாப்ளின் களமிறங்கியுள்ளார்.
ஒரு சராசரி மரம் நடுவோர் ஒரு நாளைக்கு 2,000 முதல் 5,000 மரங்கள் வரை மட்டுமே நடுவார்கள். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக மரம் நடும் பணியில் ஈடுபட்டு, இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்டுள்ள சாப்ளினுக்கு இது ஒரு தவ வாழ்க்கை போன்றதாகும்.
மரம் நடுவது என்பது உடலையும் மனதையும் சோதிக்கும் ஒரு கடுமையான கலை. 24 மணி நேரமும் குனிந்தபடியே, அமர்ந்த நிலையில் (Squat) இந்த பணியைச் செய்ய வேண்டும். கடந்த இரண்டு மாதங்களாக முழுநேரமாக மரம் நட்டு என்னை இந்த சாதனைக்காகத் தயார்படுத்தியுள்ளேன். இப்போது என் உடல்நிலை 20 வயது வாலிபனைப் போல சுறுசுறுப்பாக உள்ளது, என சாப்ளின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஜூன் 30 காலை 8 மணிக்குத் தொடங்கிய சாப்ளினின் இந்த சாதனைப் பயணம், ஜூலை 1 காலை 8 மணி வரை இடைவிடாது நீடித்தது. ஒட்டுமொத்த கனடிய மக்களும் ஒரு புதிய உலக சாதனையை நோக்கித் தங்களின் வாழ்த்துகளை இவருக்குக் குவித்து வருகின்றனர்.