சிவப்பு பட்டியல் நாடுகளுக்கு சென்றால் மூன்று ஆண்டு பயணத் தடை; எச்சரிக்கை விடுத்த நாடு
அரசாங்கத்தின் அனுமதி இன்றி சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சென்றால், மூன்று ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிக்கப்படும் என சவூதி அரேபியா அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக , ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, துருக்கி, வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளன.
ஆகவே இந்த நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது வேறொரு நாடு வழியாகவோ பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்றால் பயணத் தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த மே மாதம் முறையான அனுமதி அன்றி சிலர் இந்த நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் திரும்பி வரும் போது அபராதத்துடன், மூன்று ஆண்டு பயணத் தடையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய வளைகுடா நாடான சவூதி அரேபியாவில் இதுவரை 520,774 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் அங்கு 8,189 கொரோனாவிற்கு பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.