அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கும் டிக்டொக்
அமெரிக்காவில் குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், டிக்டொக் நிறுவனம் அமெரிக்க நீதித்துறையுடன் 400 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்ததாகவும், பெற்றோர் கோரிய போதிலும் குழந்தைகளின் கணக்குகளை நீக்கத் தவறியதாகவும் டிக்டொக் மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் மீது அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.

சமரச ஒப்பந்தம் - பெற்றோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி
இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர டிக்டொக் நிறுவனம் உடனடியாக 300 மில்லியன் டொலரை செலுத்தவுள்ளதுடன், மியூசிக்கலி நிறுவனத்துக்கு எதிரான முந்தைய உத்தரவு இரத்து செய்யப்பட்ட பின்னர் மேலும் 100 மில்லியன் டொலரை செலுத்தவுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
இந்த சமரச ஒப்பந்தம் அமெரிக்க குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரல் ஸ்டான்லி இ. உட்வார்ட் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீண்டகால சட்டப் போராட்டத்தை தவிர்ப்பதற்கும் அமெரிக்க பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிக்டாக் நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமலேயே வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.