இந்தியாவுக்கு புறப்பட இருந்த விமானங்களுக்கு நேரவிருந்த விபரீதம்!
டுபாயில் இருந்து இந்தியாவுக்கு புறப்படவிருந்த இரு விமானங்கள் , ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய அனர்த்தம் ஏற்படவிருந்த நிலையில் இறுதி நேரத்தில் தடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான போயிங் 777 ரக விமானம், டுபாய் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் ஐதராபாத் நோக்கிப் புறப்படத் தயாரானது.
இதன்போது, அதே ஓடு பாதையில் மற்றுமொரு விமானம் பயணித்துள்ளது. பெங்களுர் நோக்கிப் பயணமான மற்றுமொரு போஹிங் 777 ரக விமானமே இவ்வாறு அந்த ஓடுபாதையில் பயணித்துள்ளது.
இந்நிலையில் இரு விமானங்களும் , ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய அனர்த்தம் ஏற்படவிருந்த நிலையில் இறுதி நேரத்தில் அது தடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு விமானப் பயணங்களுக்கு இடையே, குறைந்தது 5 நிமிட கால இடைவெளி இருக்க வேண்டிய நிலையில், ஒரே சந்தர்ப்பத்தில் இரண்டு விமானங்கள் பறக்கத் தயாரானமை தொடர்பில் டுபாய் விமான நிலைய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.