ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைக்கு டிரம்பே காரணம்; குற்றம் சுமத்தும் பைடன்
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தலிபான்களுடன் போட்ட தவறான ஒப்பந்தமே ஆப்கானின் தற்போதைய குழப்பங்களுக்கு காரணம் என அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய விவகாரத்தில் அதிபர் பைடன் மீது கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு மிகவும் சரியானது என மனதார நம்புவதாகவும் இது அறிவுபூர்வமான முடிவு, அமெரிக்க நலன் காக்கும் முடிவு என்றும் பைடன் உருக்கமாக தெரிவித்தார்.
அத்துடன் ட்ரம்ப் அதிபராக இருந்த போது தலிபான்களுடன் போட்ட தவறான ஒப்பந்தமே தற்போதைய குழப்பங்களுக்கு காரணமாகி விட்டது என்றும் பைடன் சாடினார்.
ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் தலிபான்களை விடுவிக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாகவும் இதன் விளைவாகவே அவர்கள் வேகமாக எழுச்சி பெற முடிந்ததாகவும் பைடன் குறிப்பிட்டார்.
மேலும் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடத்தி வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டாலும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதிபர் பைடன் தெரிவித்தார்