காலை உணவு சாப்பிட்ட 3 வயது சிறுமி பரிதாப மரணம்
ஸ்கார்பரோவில் 3 வயது சிறுமி பரிதாபமாக மரணமடைந்த சம்பவத்தில், காலை உணவில் விஷம் கலந்திருந்ததே காரணம் என ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்கார்பரோவில் Bernice Nantanda என்ற 3 வயது சிறுமி மார்ச் மாத தொடக்கத்தில் காலை உணவுக்கு பின்னர் மரணமடைந்த சம்பவத்தில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சிறுமி Bernice Nantanda வசித்து வந்த அதே குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த தமது நெருங்கிய தோழியின் குடியிருப்பில் வைத்தே சம்பவத்தன்று காலை உணவு சாப்பிட்டுள்ளார்.
காலை உணவு சாப்பிட்ட இரு குழந்தைகளும் வாந்தி எடுத்ததுடன், அப்படியே சுருண்டு விழுந்துள்ளனர். இதனால் பயத்தில் உறைந்து போன அந்த தாயார் உடனையே Bernice-ன் தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார்.
Bernice-ன் தாயார் Mirembe அந்த குடியிருப்புக்கு செல்லவும், தமது மகள் பரிதாபமாக கிடப்பதைக் கண்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி Bernice Nantanda மருத்துவமனையில் பரிதாபமாக மரணமடைந்தார். அவரது தோழியான இன்னொரு சிறுமி, நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், 45 வயதான Francis Ngugi என்பவரை கைது செய்துள்ளனர்.
இவரே சிறுமிகள் சாப்பிட்ட காலை உணவில் ரசாயன பொருளை கலந்ததாக தெரிய வந்துள்ளது. இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.