3 வாரங்களில் 1,000 வழக்குகள்... ரொறன்ரோ பொலிசார் தகவல்
கடந்த 3 வாரங்களில் மட்டும் குடியிருப்புக்குள் மற்றும் வெளியே கூட்டம் கூடியதாக கூறி 1,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மாகாணம் முழுவதும் பொதுமக்கள் குடியிருப்பினை விட்டு வெளியேற வேண்டாம் என விதி அமுலில் இருக்கும் நிலையிலேயே இது நடந்துள்ளது என பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பல பேர் ஒன்றாக கூடுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான கூட்டங்கள் தொடர்பில் கண்காணிக்க ரொறன்ரோ பொலிசார் 16 குழுக்களை உருவாக்கியிருந்தனர்.
இந்த குழுக்களானது தற்போது வாரத்திற்கு 300 புகார் அழைப்புகளுக்கு பதிலளிப்பதாக கூறப்படுகிறது. இந்த குழுக்கள் செயல்பட தொடங்கியதன் பின்னர் மொத்தம் 1,017 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 400 பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ரொறன்ரோ பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த வாரம் இதுபோன்ற ஒரு கூட்டம் தொடர்பில் தகவல் கிடைத்ததன் பேரில், சம்பவயிடத்திற்கு சென்ற பொலிசார் 24 பேர்கள் மீது வழக்கு பதிந்ததுடன், 13,000 டொலர் மதிப்பிலான மதுவும் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் கண்டிப்பாக 750 டொலருக்கான அபராதம் விதிக்கப்படுவது உறுதி என பொலிஸ் தரப்பு எச்சரித்துள்ளது.
மேலும் பொதுமக்களும் இதுபோன்ற கூட்டங்கள் தொடர்பில் தகவல் அளித்து பொலிசாருக்கு உதவ கோரிக்கை வைத்துள்ளனர்.