அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வீட்டில் நேர்ந்த சோகம்.!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தன்னுடன் 13 வருடங்களாக இருந்த தன் செல்ல நாய் புற்றுநோயால் இறந்ததால் வேதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் குடும்பத்தினருக்கு, கடந்த 2008 ஆம் வருடம் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய ஆதரவாளராக இருந்து மறைந்த செனட்டர் எட்வர்ட் எம் கென்னடி, Portuguese Water Dog இனத்தைச் சேர்ந்த Bo என்ற நாய்க்குட்டியை பரிசாக அளித்துள்ளார்.
இந்நிலையில் Bo, பல நாட்களாக புற்றுநோயால் போராடிவந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்தது. இதனால் மிகுந்த வேதனையடைந்த ஒபாமா, தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, "இன்று எங்கள் குடும்பம் விசுவாசமான மற்றும் உண்மையான நண்பனை இழந்திருக்கிறது, எங்களது வாழ்க்கையில் நல்ல நாள் மற்றும் கெட்ட நாட்களில் அவனைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம்,
Today our family lost a true friend and loyal companion. For more than a decade, Bo was a constant, gentle presence in our lives—happy to see us on our good days, our bad days, and everyday in between. pic.twitter.com/qKMNojiu9V
— Barack Obama (@BarackObama) May 8, 2021
வெள்ளை மாளிகையில் இருந்ததால் பல துன்பங்களை எதிர்கொண்டு இருக்கிறான், அதிகமாக குரைத்தாலும், யாரையும் கடிக்க மாட்டான், கோடை காலங்களில் நீச்சல் குளத்தில் குளிக்க ஆசைப்படுவான், குழந்தைகளுடன் பழகுவதில் அவனை போன்று எவரும் இல்லை,
இரவு நேரங்களில் உணவு மேசையை சுற்றி வருவான், முடி அழகாக இருக்கும், நாங்கள் அவன் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதைவிட நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறான், அவனை இழந்ததில் மிகுந்த வருத்தமடைந்துள்ளோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.