முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட கனேடியர்களுக்கு சிறப்பு சலுகை
கனடாவில் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவில் கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும், மோசமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவதாகவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மேலும், வரவிருக்கும் வாரங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு கட்டுப்பாடுகளை எளிதாக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கூடுதல் அறிவிப்புகள் வெளிவரலாம் என குறிப்பிட்டுள்ள ட்ரூடோ,
இது முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றார். கொரோனா பரவல் காரணமாக மார்ச் 2020ல் இருந்தே கனேடிய மக்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்து வருகிறது.
பின்னர், தொற்றில்லை என்ற சான்றிதழ் இருந்தால் பயணம் மேற்கொள்ளலாம் என்ற விதி அதிகாரிகளால் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.
மட்டுமின்றி கட்டாய தனிமைப்படுத்துதல் விதிகளும், மீறுவோருக்கு அபராதவும் விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம், நாட்டிற்கு வரும் பயணிகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹொட்டல்களில் தங்கள் சொந்த செலவில் தனிமைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தது.
ஆனால் 5,000 டொலர் வரை பிழை செலுத்த தயாரான சிலர் ஹொட்டல் தனிமைப்படுத்தலில் இருந்தும் விடுவித்துக் கொண்டனர்.
தற்போது தடுப்பூசி முழுமையாக பெற்றுக்கொண்டவர்களுக்கு சலுகைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.