ரொறன்ரோ விமான நிலையத்தில் சிக்கிய இருவர்: பெருந்தொகை பிழை விதிப்பு
கொரோனா சோதனை தொடர்பாக திருத்தப்பட்ட தரவுகளை அளித்ததாக கூறி வெளிநாட்டவர்கள் இருவருக்கு ரொறன்ரோ விமான நிலையத்தில் பிழை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை கனடா போக்குவரத்து உறுதி செய்துள்ளது. பிப்ரவரி 8ம் திகதி டொமினிக்கன் குடியரசு நாட்டில் இருந்து ரொறன்ரோ விமான நிலையம் வந்த ஒருவர், கொரோனா சோதனை தரவுகளை திருத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நபருக்கு 2,500 டொலர் பிழை விதிக்கப்பட்டது. இரண்டாவது நபர் ஏப்ரல் 3ம் திகதி அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். குறித்த நபர் தமது சுகாதார நிலை தொடர்பில் தவறான தகவலை அளித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
அவருக்கு 6,500 டொலர் பிழை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில், விமான பயணி ஒருவர் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்னர் தமக்கு கொரோனா பாதிப்பில்லை என்பதை உறுதி செய்து கொள்வதுடன், அதற்கான தரவுகளையும் விமான சேவை நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், பிழை விதிக்கப்பட்ட இருவரும் தங்கள் தரவுகளை திருத்தியுள்ளதும், சுகாதார நிலை குறித்து வெளியிட மறுத்ததும் குற்றமாக பார்க்கப்படுகிறது.
மேலும், கனடா போக்குவரத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயங்காது எனவும் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மெக்சிகோவிலிருந்து கனடாவுக்குச் சென்ற இரண்டு பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஒருவருக்கு 10,000 டொலர் பிழையும், தரவுகளை திருத்தியதாக கண்டறியப்பட்ட இன்னொருவருக்கு 7,000 டொலர் பிழையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.