ரொறன்ரோவை உலுக்கிய நால்வர் கொலை வழக்கு: லொறி சாரதிக்கு அளிக்கப்பட்ட தண்டனை
ரொறன்ரோவில் நால்வர் கொல்லப்பட்ட கொடூர சாலை விபத்தில் லொறி சாரதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வின்னிபெக் பகுதியை சேர்ந்த 40 வயதான Sarbjit Singh Matharu என்பவருக்கே நால்வர் கொல்லப்பட்ட வழக்கில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2016 ஜூன் மாதம் பிரதானசாலை 400ல் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையை சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். நான்காவதாக இன்னொரு பெண்மணியும் இந்த விபத்தில் சிக்கி பலியானார்.
ஒன்ராறியோ உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் கோட், மாதருவுக்கு குற்றவியல் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட மரணத்திற்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
சிறை தண்டனை முடிவடைந்த பின்னர் 10 வருடங்களுக்கு மாதரு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படும், மட்டுமின்றி அவரது டி.என்.ஏ மாதிரிகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பணியாற்றும் நிறுவனத்தால் தமக்கு அளிக்கப்பட்ட மன அழுத்தமே இந்த விபத்திற்கு காரணம் என மாதரு குறிப்பிட்ட காரணங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
ஆனால் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளில் மாதரு இந்த சம்பவம் தொடர்பாக வருத்தப்படுவதாக அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.